பணம் இல்லாத லோன்!

பொதுவாக பணம் தேவைக்கு தான் லோன் எடுப்பார்கள், ஆனால் இந்த பதிவில் லோன் கணக்கு ஒருவர் செய்யும் தப்புக்காக திறக்கப்படும் என்று கற்பனை செய்யப்பட்டுள்ளது 

சரி, இந்த லோன் கணக்கில் என்னெல்லாம் நடக்கும் ன்னு பார்க்கலாம்:

எப்பொழுதெல்லாம் நாம் ஒரு தப்பு / பாவம் செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் ஒரு லோன் அக்கௌன்ட் திறக்கப்படும் என்று வைத்துக்கொள்வோம்.

1. லோன் என்றாலே அசல் மற்றும் வட்டி என்று இரண்டு விஷயங்கள் உள்ளன. அசல் என்பது நாம் செய்த செயல் - அது தப்பாக இருந்தால் சிறிய தொகை, அது பாவமாக இருந்தால் பெரிய தொகை 

2. நாம் செய்த செயலுக்கு அப்பப்போ வட்டி கட்டியாகனும். அது தான் நமக்கு நேரிடும் சிறு சிறு துன்பங்கள். 

3. நாம் செய்யும் நல்ல விஷயங்கள் அசலை குறைத்துக்கொண்டு வரும். அசல் குறைய குறைய வட்டியும் குறைய வாய்ப்பு இருக்கு.

4. சில பேர், அசல் தொகையை மறந்து வெறும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் அசல் அப்படியே தான் இருக்கும். இதெல்லாம் லோன் பிளானை பொறுத்து இருக்கு. (பிளான் என்றால் நாம் செய்யும் தப்பின் வகையாக எடுத்துக்கொள்வோம்)

5. சரி, அசல் எப்பொழுது திருப்பி கொடுக்கலாம்? எப்பொழுது நாம் மனசால நாம செய்தது தவறு / பாவம் என்று உணர்ந்து திருத்தி கொள்கிறோமோ அப்பொழுது அசலை அடைக்கலாம். ஆனால், நம்ம பக்கத்துல ஒரு பெரிய இழப்பு நடக்கலாம். (திடீரென்று பெரும் தொகை நம்மை விட்டு போனால் அது பெரும் இழப்பு தானே?)

அப்படி ஒரு இழப்போட அந்த லோன் கணக்கு முடிந்து விடும்.

6. அப்படி நாம உணரவில்லை என்றால்? ஒன்று, புது புது கணக்குகள் திறக்கப்படலாம். அல்லது, இருக்கும் கணக்கிலே டாப்-அப் செய்யப்படும். (டாப்-அப் என்பது வாங்கிய அசல் தொகை மேலும் அதிகரிக்கும் - அதுக்கேற்ப வட்டியும் அதிகரிக்கும் )


இனி நாம் ஒரு தவறு செய்ய நேரிட்டால், இந்த லோன் விஷயம் நமக்கு ஞாபகம் வந்தால், இருக்கும் லோன்களே போதும் என்ற எண்ணம் வரும்!

அது மட்டும் இல்லை, செய்த தவறுக்கு நமது பக்கத்தில் ஒரு இழப்பு ஏற்பட்டால், திருந்த சந்தர்ப்பம் கிடைத்தது என்றும் இத்துடன் லோன் முடிந்தது என்றும் நம்மையே நாம் தேற்றிக்கொள்ளலாம்.

எத்தனை லோன் அக்கௌன்ட் இருந்தாலும்,
சீக்கிரம் அடைக்க முயற்சி எடுப்போம்!
மீண்டும் லோன் அக்கௌன்ட் திறக்காமல் பார்த்துக்கொள்வோம்!!!



Comments